சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டிக்கு பதிலடி தரும் வகையில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) ஐடி பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலான பதிவை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக-அதிமுக கூட்டுக்களவாணிகள் அல்ல என்றும், அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் பேசி, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்யே களவாணி என்றும் கடுமையாக விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பிறகு வேறு பேச்சு என முதலமைச்சர் விஜய் பேசுவதாகவும், திமுக-அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது கட்டுக்கதை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, த.வெ.க ஐடி பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது.'
மேலும், 'திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கிறது. கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் த.வெ.க அரசு பற்றி குறை கூறுவது குபீர் சிரிப்பு காமெடி.' என்றும் பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து, 'கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாக பேட்டி கொடுப்பதை விடுத்து, கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்' என்று த.வெ.க ஐடி விங் கிண்டல் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு த.வெ.க ஐடி பிரிவு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.
