இந்தியாவிற்குள் எபோலா தொற்று இதுவரை இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உகாண்டாவிலிருந்து இந்தியா வந்த ஒரு பயணிக்கு எபோலா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் எபோலா வைரஸின் 'புண்டிபுகியோ' வகைப் பரவலை கண்டறிந்துள்ளன.
இதன் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட பரிந்துரைகளில், புண்டிபுகியோ வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் பயணிகளைக் கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்திய அரசு, மறு அறிவிப்பு வரும் வரை, காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் உகாண்டாவிலிருந்து இந்தியா வந்த ஒரு பயணிக்கு லேசான உடல் வலி இருந்ததால், அவர் பெங்களூருவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி, தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் எபோலா தொற்று இதுவரை பதிவாகவில்லை என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, மத்திய சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் பரிசோதனைகள் தொடர்வதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.