திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ், தவெகவை விமர்சித்து கருத்து பதிவிட்டதற்காக தாக்கப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளார். இதனை மீறினால் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'தவெகவை விமர்சித்ததற்காக திமுகவின் இளைஞரணி நிர்வாகி கனீஷ் தாக்கப்பட்டதற்கு உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். காவல்துறையினர் தவெகவிற்கு துணை போனால், திமுகவின் வலுவான சட்டத்துறை அணி அதனை எதிர்கொள்ளும். இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டால் சட்டத்தின் மூலம் முறியடிப்போம்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். லேசாக விட்டதன் விளைவுதான் இது. தவறான பிரச்சாரங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் திமுகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தவெகவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் போலீசார் FIR கூட போட மறுக்கின்றனர். திமுகவினர் ஒருவரை கைது செய்தால், அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் வருவோம். மக்கள் பிரச்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். தவெகவின் 40 நாள் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை பிரச்சினை உள்ளது' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுகவின் இளைஞரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சி, உடனடியாக FIR பதிவு செய்யாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக மற்றும் காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.