சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் உரையாற்றியபோது, முதல்வர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை சுட்டிக்காட்டி, தற்போதைய காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் முதல்வர் மெத்தனமாக செயல்படுவதாக விமர்சித்தார்.
தமிழ்நாடு நீர்வளத்துறையின் கீழ் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு, கல்லணை, வீராணம் ஏரி, கொள்ளிடம் கீழணைக்கட்டு உள்ளிட்ட முக்கிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கு 2022ஆம் ஆண்டு உலக பாரம்பரிய நீர்ப்பாசன விருது வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 2022ஆம் ஆண்டு கச்சமங்கலம் அணைக்கட்டுக்கு சிறந்த திட்டம், சிறந்த கட்டுமானப் பணி மற்றும் பராமரிப்புக்கான மத்திய நீர்ப்பாசன விருதும், 2025ஆம் ஆண்டு செய்யாறு, கொடியாறு உள்ளிட்ட அணைக்கட்டுகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய அரசு எந்தவிதமான மசோதாவையும் வெளியிடாத நிலையிலும், அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரத்திலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று துரை சந்திரசேகர் வலியுறுத்தினார். காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
'நமது பயணத்தை கர்நாடக முதலமைச்சரால் எப்படி சொல்ல முடியும்? இது எந்த விதத்தில் நியாயம்? நமக்கென்று ஒரு மரியாதை உள்ளது. முதலமைச்சர் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சூழலும் விவசாயத்தை விடக் கூடாது' என்று 'கத்தி' திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய வசனத்தை துரை சந்திரசேகர் நினைவுபடுத்தினார்.
ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து, விவசாயத்தை கைவிடும் சூழல் நிலவுவதாக அவர் கவலை தெரிவித்தார். இது நியாயமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கக் கூடாது என்பதற்காக மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரத்தில் த.வெ.க. அரசு மென்மையான போக்கைக் கடைபிடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். எதற்காக பயப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், செய்தியாளர்களை பார்த்தாலே அமைச்சர் என்.ஆனந்த் பயந்து ஓடுவதாகவும், அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம் ரசிக்கும்படி இருந்ததாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
