தமிழகத்தில் திமுகவின் அழிவு மாநிலத்திற்கு நல்லது என்றும், அதை உதயநிதி ஸ்டாலின் விரைவில் செய்து முடிப்பார் என்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், முதல்வர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அவர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உதாரணமாக, முதல்வர் விஜய் ‘Party Fund’ வழங்கப்படாது என்று கூறியிருந்தால், உதயநிதி பேசும்போது ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார் என்றும், அவருடைய ஆட்சிதானே, முடிந்தால் நிரூபிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு கொண்ட கட்சிக்கு அழகா என கேள்வி எழுப்பிய சவுக்கு சங்கர், இதுதான் திமுகவின் அசல் குணம் என்றும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார் என்றும், நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள் என்றும், திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது என்றும், அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.