டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது இரண்டு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில், லோதி காலனியில் உள்ள பி.கே. தத் காலனியில், சாவ்லா ஸ்வீட்ஸ் எதிரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக டெல்லி தீயணைப்புத் துறைக்கு (DFS) தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட ஒரு பெண், 'வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது… நாங்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளோம்… தயவுசெய்து விரைவாக உதவி அனுப்புங்கள்' என்று பதற்றத்துடன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, சில நிமிடங்களில் அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த அழைப்பைத் தொடர்ந்து, காவல்துறையும் தீயணைப்புத் துறையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்று இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது. மேலும், மூன்று ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தொடங்குவதற்குள், தீயானது வீட்டை முழுவதுமாக சூழ்ந்து கொழுந்துவிட்டு எரிந்தது.
மேல் தளத்திலிருந்து அடர்த்தியான புகை மண்டலங்கள் வெளியேறியது, அக்கம்பக்கத்தினரிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உள்ளே, தீயில் கருகிய நிலையில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய தாயார் என்றும், அவரது 7 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
