தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக விஜய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், சி.வி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பழனிசாமி தரப்பு சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். புதுக்கோட்டையில் செல்வாக்கு மிக்க நபராகத் திகழும் விஜயபாஸ்கர், முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையிலேயே தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில், விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால் அதற்கு முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால், விராலிமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.