திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுகதான் நடத்தியது என்று கூறுவது முற்றிலும் பொய் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
'திமுகவுக்கு நாங்கள்தான் கூட்டணி பேசினோம்' என்று கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று நான்தான் பரிந்துரைத்தேன் என்றும் அவர் வெளிப்படையாக கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைமருமான ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் போது, திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அதிமுகவினரை அமைச்சர்களாக்கலாம் என அப்போதைய சூழலில் நான் கூறியதாக சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து அதிமுகவின் தோல்விகளுக்கு ஈ.பி.எஸ்ஸே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். வெற்றி என்றால் ஈ.பி.எஸ் என்றும், தோல்வி என்றால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஈ.பி.எஸ்ஸுக்கே அவரது சொந்த மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வட மாவட்டங்களில் பாமகவின் ஆதரவால் அதிமுக வெற்றி பெற்றதாகவும், ஆனால் தென் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
ஈ.பி.எஸ்ஸே அதிமுகவின் பொதுச்செயலாளராக தொடர்கிறார் என்றும், அவர் பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.
அதிமுக குறித்து பேசுவதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, தன் கீழ் பணியாற்றிய ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட குற்றவாளி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

