சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய பவர்பிளே ஆட்டம் மிரள வைப்பதாக இருந்தது. இளம் புயல் ஊர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். அவரது அதிரடி லக்னோ அணியின் பிளே ஆப் கனவை ஒட்டுமொத்தமாக காலி செய்தது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களம் இறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் இளம் வீரர் ஊர்வில் படேல். களம் புகுந்த முதல் பந்திலிருந்தே லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்யத் தொடங்கிய அவர், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய ஊர்வில் படேலின் ஆட்டத்தைப் பார்த்து லக்னோ பந்துவீச்சாளர்கள் நிலை குலைந்து போனார்கள்.
சிஎஸ்கே அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளே முடிவிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. அதாவது வெற்றிக்குத் தேவையான ரன்களில் பாதியை வெறும் 6 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்துவிட்டது. இதைப் பார்த்த போதே லக்னோ அணிக்கு தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையிழந்து சோர்ந்து காணப்பட்டனர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஊர்வில் படேல் மொத்தம் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 282 ஆக இருந்தது. இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 ஃபோர் அடங்கும். அவர் ஆட்டமிழக்கும் போது சிஎஸ்கே அணி 9.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றி அப்போதே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது