தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.500 வரை அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியையும் பெரிதும் பாதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. உதாரணமாக, ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.3,300-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.3,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.4,000-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.4,500-க்கும், ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ.5,000-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனையாகிறது. மாவட்டங்களுக்கு ஏற்ப இந்த விலை உயர்வில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் குவாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே இந்த திடீர் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.