தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 21 வயது மாணவர் சுடலைமுத்து என்ற சுரேஷ், உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சுரேஷ், மாலை சுமார் 6.10 மணியளவில் தனது நண்பரான காளிராஜ் என்பவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க… சந்தோசமா இருங்க… எல்லாரும் ஹாப்பியா இருங்க…' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றபோது, சுரேஷ் மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு நண்பரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக கீழே இறக்கியபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.