கோவை: 10 வயது சிறுமி கடத்தல் கொடூரம் – இருவர் கைது!

கோவையின் சூலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம், ஒரு 10 வயது சிறுமி காணாமல் போனதோடு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சோகத்தில் முடிந்துள்ளது. பெற்றோர் கடைக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், இருவர் அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல் துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன சிறுமிதான் இது என்பதும், அவரை கடத்திச் சென்ற இருவரும் கொடூரமாக கொலை செய்து உடலை மறைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியதால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுமி கொலை தொடர்பாக கார்த்தி, மோகன்ராஜ் என்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா இல்லையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது' என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version