இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான்பூச்சி' என குறிப்பிட்டதற்கு பதிலடியாக, ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் தீப்கே, 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' என்ற பெயரில் ஒரு நையாண்டி கட்சியை தொடங்கினார். இந்த கட்சி குறுகிய காலத்திலேயே பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும், அதன் சமூக வலைத்தள பக்கங்களில் லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் பெற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த நையாண்டி கட்சியின் பிரச்சாரம் வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இணையதளம் 'ஹேக்' செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய அளவில் இந்த ஹேக்கிங் நடந்திருப்பதாகவும், தனது பல்வேறு சமூக வலைத்தள கணக்குகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அபிஜித் தீப்கே தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில், 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி'யின் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், தனது எக்ஸ் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய மற்றொரு கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்த சமூக வலைத்தளப் பக்கங்களையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, அதில் ஏதேனும் பதிவுகள் வந்தால், அது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த திடீர் இணையதள முடக்கம் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து அபிஜித் தீப்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு நையாண்டி கட்சி இவ்வாறு முடக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மேலும் அவர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.