பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை 3 சதவீதம் வரை சலுகை விலையில் விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், முதலமைச்சர் விஜய் 'இந்திய அரசு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அன்றிலிருந்து, மத்திய அரசுக்கு பலவேறு விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். குறிப்பாக, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது, நீட் தேர்வை ரத்து செய்வது, பருத்தி இறக்குமதி வரியை நீக்குவது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது, உரங்களை தட்டுப்பாடின்றி வழங்குவது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை, இந்த அனைத்து கடிதங்களிலும் மத்திய அரசை, முதலமைச்சர் விஜய் 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வந்தார். 'ஒன்றிய அரசு' என்ற சொல் பயன்பாடு திமுகவினரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சொல்லுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், 'இந்திய ஒன்றியம்' என்பதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே விஜய் குறிப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் இன்று எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இது, ஒன்றிய அரசு என்பதை இந்திய அரசு என மாற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 'மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபடமாட்டோம்' என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இன்றைய கடிதத்தில் பாஜகவினருக்கு விருப்பமில்லாத ஒன்றிய அரசு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, இந்திய அரசு என முதலமைச்சர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version