மக்களவை தொகுதிகள் அதிகரிக்கக் கூடாது: சட்டசபையில் முதல்வர் விஜய்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என வலியுறுத்தி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான இந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.

சங்க காலம் தொட்டு இன்றுவரை தமிழகப் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார். சங்க காலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள் என்றும், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள் என்றும் அவர் கூறினார். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் போன்றோர் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியதையும், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மகத்தானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்தும் முதல்வர் விஜய் விளக்கினார். 'ஆறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது' என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும் அபாயம் உள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தால் அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும் என்றும், எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மேலும், ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டு 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவையும், 2026ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவையும் தாக்கல் செய்ததாகவும், ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அந்த மசோதா நிறைவேறவில்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இதனை இணைப்பதால், நடைமுறைப்படுத்த மேலும் பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கான மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டைச் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தால், அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பெண்களின் அரசியல் உரிமையை மறுக்கும் செயல் என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

எனவே, மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அதனை ஒத்திவைக்கக்கூடாது என்றும், மேற்படி தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது என்று முதல்வர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version