தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, விஜய் அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகப் பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் முதல்வர் விஜய் சந்தித்தார்.
இந்தச் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதல்வர் விஜய் இன்று சந்தித்தார். வேளச்சேரியில் அமைந்துள்ள திருமாவளவனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், அவரைச் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் விஜய்யை வாசலுக்கு வந்து வரவேற்ற திருமாவளவன், அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கத்தை முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்.