டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்காமலேயே சென்னை திரும்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், கடந்த 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக அவர் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்தித்த விஜய், அவரிடம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். மத்திய அமைச்சர் அமிஷாவை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தாலும், அதற்கான சாதகமான பதில் வரவில்லை.
டெல்லி பயணத்தின்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என கூறப்பட்டது. இதற்காக தமிழக மாணவர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், விஜய் அங்கு செல்லாமலேயே சென்னை திரும்பி விட்டார். இது மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.