சீனாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால், அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மழையால் சேதமடைந்த ஒரு பூங்காவில் இருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றுள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற பாம்புகளில் பெரும்பாலானவை விஷத்தன்மை அற்றவை என்றாலும், அவற்றை பிடிக்கும் பணியில் சிறப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கனமழையால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், 4,800 வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனாவின் 62க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் துரிதப்படுத்த வேண்டும் என்று அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு தங்கு தடையின்றி உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

