தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான குறும்படப் போட்டியைத் தொடங்கியது என்றும், தற்போது அதன் 12வது பதிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டிக்கு நாட்டின் எந்த வயது குடிமகனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். அத்துடன், நடுவர் குழு பரிந்துரைத்தால், ஆணையம் மூன்று ரொக்க விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளுடன் சேர்த்து, அதிகபட்சமாக 4 படங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் 'சிறப்பு குறிப்பு சான்றிதழ்' (Certificate of Special Mention) வழங்குவதையும் பரிசீலிக்கும்.
குறும்படங்கள் எந்த இந்திய மொழியிலும் இருக்கலாம்; ஆனால் ஆங்கில துணைத் தலைப்புகள் கட்டாயம். குறும்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 3 நிமிடங்களாகவும், அதிகபட்சம் 10 நிமிடங்களாகவும் இருக்க வேண்டும்.
பதிவுகளை கூகுள் டிரைவ் மூலம் nhrcshortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைனில் அனுப்ப கடைசி நாள் 30.6.2026. இந்தப் போட்டி தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை NHRC இணையதளத்தில் (https://nhrc.nic.in) அல்லது இந்த இணைப்பில் (https://nhrc.nic.in/flipbook/files/255) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்திய குடிமக்களிடையே மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டி நடத்தப்படுகிறது.
