திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பால் மனம் மாறாத குழந்தையை நான்கு மனித மிருகங்கள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை இழந்த பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், அவர்கள் கஞ்சா போதையில் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற கொடூரமான குற்றங்களை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் நான்காம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். அப்போது பாமக நடத்திய தொடர் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்றும், விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இப்போது மீண்டும் அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்ந்திருப்பது காவல்துறையின் தோல்வியையே காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இதில் காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவுதான் இந்த துயரம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசும் காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.