திருநெல்வேலியில் குண்டும் குழியுமான சாலை காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சேக் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையம் BSNL அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று அவர்களின் பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில், தாயின் மடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தை ரஹீமாவின் தலையில் கார் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் வேகமாகச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக உயிரிழந்த குழந்தையை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலைத் துறையால் முறையாகப் பராமரிக்கப்படாத, குண்டும் குழியுமான சாலையே இந்த விபத்துக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
