சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 போட்டி வருகிற மே 18 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முக்கிய கிரிக்கெட் திருவிழாவைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை எந்தவித சிரமமும் இன்றி கண்டு ரசிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் CSK Cricket Limited உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரசிகர்கள் தங்கள் பயணத்தை எளிதாக்கிக் கொள்ளலாம்.
ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், தங்கள் டிஜிட்டல் அல்லது பிசிகல் பயணச்சீட்டில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்வதன் மூலம் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சென்னையில் உள்ள எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் வரை கட்டணமின்றி பயணிக்கலாம்.
போட்டி முடிந்ததும், நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களுக்கு கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்குப் புறப்படும். பச்சை வழித்தடப் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றிக் கொள்ளலாம். கடைசி மெட்ரோ ரயிலைப் பிடிக்க, பயணிகள் நள்ளிரவு 12:50 மணிக்குள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு வசதிகளைப் பயன்படுத்தி, ஐபிஎல் போட்டியை உற்சாகமாக கொண்டாட சென்னை மெட்ரோ நிர்வாகம் ரசிகர்களை அழைக்கிறது.