சென்னையை உலுக்கியுள்ள லீஸ் மோசடி சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் வெண்ணிலா, ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரியில் வீடு லீசுக்கு தேடியுள்ளார். அப்போது OLX இணையதளத்தில் 7 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு இருப்பதை பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். வீட்டை நேரில் பார்த்து பிடித்த வெண்ணிலா, அக்பர் ஷெரிப் என்பவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஒரு வாரத்தில் வீட்டை பெயிண்ட் அடித்து தருவதாகக் கூறிய அக்பர் ஷெரிப், பல வாரங்கள் ஆகியும் வீட்டை தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெண்ணிலா, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷெரிப், கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் சேர்ந்து இந்த துணிகர மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவரும், காவல் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கோடி கோடியாக மோசடி செய்துவிட்டு பள்ளிக்கரணையில் பங்களா கட்டுவதாகக் கூறும் மக்கள், சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் விலைபோய்விட்டதாகவும், மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசடியை காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர். லீஸ் விவகாரத்தில் சுமார் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளியில் நடமாடும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்யவில்லை என்றும், தாங்களும் இதேபோல் மோசடி செய்யலாமா என போலீஸ் அனுமதிக்குமா எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், ஊடகவியலாளர்கள் தலையிட்ட பிறகே இந்த வீடு லீஸ் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.