இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் அமைப்பாக திகழ்கிறது. ஐபிஎல் போன்ற பல லாபகரமான போட்டிகளை நடத்தி வரும் இதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து நீண்ட காலமாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிசிசிஐ-யின் செயல்பாடுகளை இனி வெளிப்படையாக அறிய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தகவல் ஆணையம் (CIC) ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பிசிசிஐ ஒரு அரசு அமைப்பு அல்ல என்றும், தகவல் அறியும் உரிமை சட்டமான RTI-யின் கீழ் அது வராது என்றும் மத்திய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். பிசிசிஐ, இந்திய அரசியலமைப்பாலோ அல்லது நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்பதால், அதை அரசு அமைப்பாக கருத முடியாது என இந்த உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு, பிசிசிஐ-யை ஒரு பொது நிறுவனமாக அறிவித்து, RTI கீழ் அதன் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 முதல் 2024 வரை பிசிசிஐ தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். அவருக்கு பிறகு, முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தற்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பு வகிக்கிறார். மேலும், ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.