சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்ற தேர்வுகளில், ஆன்-ஸ்கிரீன் மார்கிங் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால், முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 85.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.9% குறைவாகும்.
மொத்தம் 18 லட்சத்து 57 ஆயிரத்து 517 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், மாணவிகள் 88.86% தேர்ச்சி பெற்று மாணவர்களை விட (82.13%) முன்னிலை வகிக்கின்றனர். மூன்றாம் பாலின மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 95% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 17,113 (0.97%) ஆகவும், 90% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 94,023 (5.32%) ஆகவும் உள்ளது.
மண்டல வாரியாகப் பார்க்கையில், திருவனந்தபுரம் 95.62% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 93.84% உடன் இரண்டாம் இடத்தையும், பெங்களூரு 93.19% உடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. தலைநகர் டெல்லியில், டெல்லி மேற்கு 92.34% மற்றும் டெல்லி கிழக்கு 91.73% தேர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்கள் 98.55% மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி நிலையங்கள் 98.47% தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண் போன்ற விவரங்களை உள்ளிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.