தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதல் என அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. ஆனாலும், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தொடர்ந்து சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு இந்த மேகேதாட்டு அணை விரிவாக்க முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும், கர்நாடகாவின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் என்பது ஒரு அரசியல் ஆயுதம் அல்ல என்றும், அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடி என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.