இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை செயலாளருமான சி.மகேந்திரன், நேற்று த.வெ.க.வில் இணைந்தார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இது குறித்து சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மகேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி பதிப்பகத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணை நின்றவர் மகேந்திரன். மேலும், மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் இணைந்து போலி ஆவணங்களை உருவாக்கியவராகவும் அவர் செயல்பட்டார். ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான பிறகு, கட்சியில் இருந்து அவர் விலகி இருந்தார். செய்த தவறுகளை திருத்திக்கொண்டு கட்சியில் செயல்பட இருந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மீதான கட்சியின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை அவரே உறுதிப்படுத்திவிட்டார்’ என தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்த சி.மகேந்திரன், 1971ஆம் ஆண்டு முதல் அக்கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில், சி.மகேந்திரன் த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.