கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட இட்லிகள் மொத்தமாக தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கங்கா மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இரு பெண் ஊழியர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில், அம்மா உணவகத்தின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், ‘இங்கு பார்சல் கிடையாது’ என்ற அறிவிப்புப் பலகையும் உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்குவதே நோக்கம். இந்நிலையில், இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால், இனி இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.