முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட, ஐந்து தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அ.தி.மு.க. வென்ற நான்கு தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவதே சரியான அணுகுமுறை என கருதப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல், மக்களின் தீர்ப்பின் மதிப்பைப் பற்றிய ஒரு முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இது ஒரு முக்கியமான தேர்தலாகும். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு இது ஒரு சவாலான தேர்தலாகும். மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாமல், வெறும் 20 நாட்களில் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது.
வாக்காளர்கள் ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல, ஒரு கட்சி, கொள்கை மற்றும் சின்னத்திற்கும் வாக்களிக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்கும், தேர்தல் தீர்ப்பிற்கும் எதிராக செயல்படும் போக்குக்கு இந்த இடைத்தேர்தலில் பதில் அளிக்கப்பட வேண்டும். ராஜினாமா செய்தவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அக்கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது தார்மீக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியான அணுகுமுறையாக இருக்கும். எதிர்க்கட்சிகள், குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.
தி.மு.க. இந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் வி.சி.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை விமர்சித்துள்ளன. எனவே, பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது ஜனநாயக நாகரீகமாகும். ஒருவேளை அ.தி.மு.க. பொது வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளித்தால், வாக்காளர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் இந்த இடைத்தேர்தல் வெளிப்படுத்தும்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தாலும், 'ஆளும் கட்சியை தடுக்க இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்க்கின்றன' என்ற விமர்சனங்கள் எழலாம். ஆனால், 'மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பின் மதிப்பை காக்கவே இணைந்து குரல் கொடுக்கிறோம்' என எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகார அரசியலை விட நியாய அரசியலையே அதிகம் மதிக்கிறார்கள். இன்று ஒன்றாக நிற்கவில்லை என்றால், நாளை இதே நிலை மற்ற கட்சிகளுக்கும் ஏற்படலாம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற பழைய அரசியல் வாதத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கினால், அது தொண்டர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பும். ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களே மீண்டும் போட்டியிட்டாலும் சரி, அல்லது புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் சரி, அவர்கள் 'டெபாசிட்' இழக்கும் அளவுக்கு மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலாக அமையும்.