இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீரர் புஜாரா ஆதரவு தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டுமானால், வேறு வீரர்களை நீக்காமல் மாற்று வழியை கையாள வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.
அயர்லாந்து தொடரில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்ததாலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததாலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
இதுகுறித்து ஜியோஸ்டார் தளத்தில் பேசிய புஜாரா, 'சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவர் எந்த அழுத்தத்தையும் உணரத் தேவையில்லை. சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரிடம் உள்ள அசத்தலான திறமைக்கு அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவரை நீக்குவது குறித்துப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று கூறினார்.
மேலும், மற்ற வீரர்களை அணியை விட்டு நீக்காமல் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து பேசிய புஜாரா, 'வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அணியில் உள்ள முக்கிய வீரர்களை நீக்கக் கூடாது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அல்லது இஷான் கிஷன் ஆகிய டாப்-3 வீரர்களில் யாரையும் நீக்காமல், மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பதன் மூலமாக மட்டுமே வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவருக்கான சரியான நேரம் விரைவில் வரும்' என்று விளக்கமளித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை மீட்டெடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தையும் புஜாரா வெகுவாகப் பாராட்டினார். ஒரு கேப்டனாக அவர் அணியை முன்நின்று சிறப்பாக வழிநடத்தியதாகவும், கடினமான சூழ்நிலையில் அவரது ஆட்டம் முதிர்ச்சியைக் காட்டியதாகவும் புஜாரா கூறினார்.