பட்ஜெட் நாளை தாக்கல்: எதிர்க்கட்சித் தலைவர் கைது – துரைமுருகன் கண்டனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஆணவ அடக்குமுறை என்றும், பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பயந்து நடத்தப்பட்ட பாசிச நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த கைது நடவடிக்கையால் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைக் கண்டு தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! இது மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் தனது 'Apprentice' ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள் குறித்தும், விவரம் இல்லாத அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், 'இம்' என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள் குறித்தும், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள் குறித்தும், டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் மாண்புமிகு முதலமைச்சரின் மௌனம் மற்றும் மெத்தனம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு அஞ்சி நடுங்கிய அரசு, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் போட்டு, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது என்றும், இது அடாவடி தவெக அரசின் அராஜகத்தின் உச்சகட்டம் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தை அரங்கேற்ற இந்த அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய், தற்போது நடத்தி வருவது தி.மு.க. கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை 'அதிகார போதையில்' மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்படி தி.மு.க.வையும் மிரட்ட முடியாது, எங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 'நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்! சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version