திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? – மாணிக்கம் தாகூரை சாடும் தமிழிசை

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'திமுகவும், அதிமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவியதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரியும், ஒரு அமைச்சரும் சிரித்துக் கொண்டிருப்பது என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புதிய அரசாங்கம் அதிக விழிப்புணர்வோடு, மக்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் உணர்வோடு செயல்பட வேண்டும். மாணிக்கம் தாக்கூருக்கு எனது கண்டனங்கள். உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சராவது என்பது உலகம் இருக்கும் வரையிலும் வாய்ப்பில்லை. திமுக மற்றும் மற்ற கட்சிகளின் தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாக சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பாஜக அரசு ஒரு வருடத்தில் கவிழும் என ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டிய தமிழிசை, 'மீண்டும் மீண்டும் பிரதமராக மோடி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்' என்றார். மேலும், 'தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றது எனக்கே பிடிக்கவில்லை என திருமாவளவனே சொல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லையென்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்திருக்கலாம். அமைச்சர் ஆகிவிட்டு, நாங்கள் இந்தக் கூட்டணியில் இருக்கிறோமா அல்லது அந்தக் கூட்டணியில் இருக்கிறோமா என எங்களுக்கே தெரியவில்லை என சொல்கிறார்கள். மக்கள் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் தினமும் ஆட்டம் காணும் அரசாங்கமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது குறித்தும் அவர் பேசினார். ஆனால், மாணிக்கம் தாகூரின் குற்றச்சாட்டுக்கு அவர் முக்கியத்துவம் அளித்து பதிலளித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version