பெட்ரோல், டீசல் விலை உயர்வு: திரும்ப பெறுக – செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு!

சென்னை: மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் தவித்து வரும் நிலையில், இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளையும் மத்திய அரசு கணிசமாக உயர்த்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் நலன் பற்றிப் பேசும் மத்திய அரசு, தேர்தல் முடிந்தவுடன் இதுபோன்று பொதுமக்களுக்கு சுமையை ஏற்றுவது ஏற்கத்தக்கதல்ல என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலன்களை மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது. தற்போதுள்ள சூழ்நிலைகளைக் காரணம் காட்டி தொடர்ந்து மக்களிடம் வரி வசூலிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார்.

எனவே, மத்திய பாஜக அரசு உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துவதாக செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version