கரூர் மாவட்டம் கடவூர் அருகே, வளையபட்டியில் விவசாயி கருணைகிரி (48) மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில், கருணைகிரி தனது களத்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் திடீரென நாட்டு துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். இதில், கருணைகிரியின் இடுப்பு மற்றும் முதுகில் 10 குண்டுகள் பாய்ந்தன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

