திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில், மது அருந்துவதை தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மற்றொருவரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன கசிநாயக்கன்பட்டி ஜல்லி ஊர் பகுதியைச் சேர்ந்த முருகன் (21), அடிக்கடி மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (36), முருகனின் தாயார் விஜயாவிடம், 'உங்கள் மகன் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். அவனை கண்டியுங்கள்' என்று கூறியுள்ளார். இது முருகனுக்கு ராமதாஸ் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நேற்று இரவு, ராமதாஸ் தனது பைக்கில் சென்றபோது, அவரை நோட்டமிட்ட முருகன் பின்தொடர்ந்துள்ளார். ராமதாஸ், சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள நெற்களஞ்சியத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றபோது, முருகன் அந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.