தமிழகத்தில் பி.எட். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நற்செய்தி! இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 21 கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இதில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,140 இடங்களும் அடங்கும்.
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 19 முதல் ஜூலை 21 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பெறப்படும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 31 அன்று வெளியிடப்படும். ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்யலாம். இட ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை www.lwiase.ac.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட கல்லூரியில் சேர வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 24 அன்று தொடங்கும்.
இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2026-2027 ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 24,334 முதுநிலை இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 19 முதல் ஜூலை 31 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 19 அன்று வகுப்புகள் தொடங்கும்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4 அன்று வெளியிடப்படும். சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 10 அன்றும், பிற மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நடைபெறும். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து, இடங்களைத் தேர்வு செய்து கல்லூரிகளில் சேரலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.