வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடிவிட்டு சட்டோகிராமில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, போலீசார் தன்னை லத்திகள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 26 வயதான நயீம் ஹசன், தான் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர் என்று பலமுறை அடையாளம் காட்டியும், போலீசார் தன்னை மதிக்காமல் தாக்கியதாக வேதனை தெரிவித்தார். மேலும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்குள்ள பொறுப்பு அதிகாரி தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து சட்டோகிராம் பெருநகர போலீஸ் துணை கமிஷனர் அமிருல் இஸ்லாம் கூறுகையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் உரிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்காக விளையாடிய வீரர் மீது நடத்தப்பட்ட இந்த செயல் வருந்தத்தக்கது என்றும், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிமும் நயீமிற்கு ஆதரவு தெரிவித்து, இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.