பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெங்களூருவில் இருந்து இன்று (26-ந் தேதி) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06545) நாளை மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06546) மறுநாள் காலை 9 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
மேலும், பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06549) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். கண்ணூரில் இருந்து 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06550) அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (26-ந் தேதி) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.