தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வழக்கமாக, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இந்த வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் சுற்றித் திரிவதுண்டு.
இந்நிலையில், குற்றாலம் காப்புக்காடு அருகே நேற்று காலை ஒரு ஆண் குட்டி யானை அதன் தாயிடமிருந்து வழி தவறி தனியாக சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் உடனடியாக செயல்பட்டனர்.
வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த குட்டி யானையை லாவகமாகப் பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதே சமயம், குட்டியைப் பிரிந்த தாய் யானையும் அதன் கூட்டமும் அருகிலேயே சுற்றித் திரிவது தெரியவந்தது.
இதனால், எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், குற்றாலம் காப்புக்காடு அருகே மக்கள் நடமாட்டம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குட்டி யானையை அதன் தாயுடன் மீண்டும் சேர்ப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். குட்டி யானையைத் தேடி தாய் யானை அதன் கூட்டத்துடன் வரக்கூடும் என்பதால், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
