வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழிநடத்துவதன் மூலம், கேப்டனாக தனது 150-வது சர்வதேச போட்டியில் பாபர் அசாம் களமிறங்குகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய இந்த ஆட்டத்தில், லாகூரைச் சேர்ந்த 32 வயதான பாபர் அசாம் ஒரு புதிய சாதனையுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெறுகிறார்.
இவருக்கு முன்பாக, இம்ரான் கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணியை 150 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வழிநடத்தி கேப்டன்களாக சாதனை படைத்துள்ளனர். 1992-ல் பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த இம்ரான் கான், சர்வதேச போட்டிகளில் அதிகமுறை அந்நாட்டை வழிநடத்திய கேப்டனாக முதலிடத்தில் உள்ளார். அவர் 1982 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் 187 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
அதேவேளையில் மிஸ்பா-உல்-ஹக் 2008 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 151 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன்களின் பட்டியலில் இம்ரான் கான் 187 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மிஸ்பா-உல்-ஹக் 151 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
பாபர் அசாம் இதுவரை 149 போட்டிகளில் (21 டெஸ்ட், 43 ஒருநாள், 85 டி20) கேப்டனாகச் செயல்பட்டு மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களுக்கு அடுத்தப்படியாக வாசிம் அக்ரம் 134 போட்டிகளிலும், இன்சமாம்-உல்-ஹக் 119 போட்டிகளிலும், சர்பராஸ் அகமது 100 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனாக இதுவரை 6820 ரன்கள் குவித்துள்ள பாபர் அசாம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் 180 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 7000 ரன்களைக் கடந்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். பாகிஸ்தான் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த சாதனையை மிஸ்பா தன்னிடம் வைத்துள்ளார். கேப்டனாக விளையாடிய 151 போட்டிகளில், 189 இன்னிங்ஸ்களில் மொத்தம் 7392 ரன்களைக் குவித்து மிஸ்பா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் மிஸ்பா-உல்-ஹக் 151 போட்டிகளில் 7392 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 149 போட்டிகளில் 15 சதங்களுடன் 6820 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து இம்ரான் கான் 187 போட்டிகளில் 5655 ரன்களுடனும் அத்துடன் கேப்டனாக 318 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒரு அணியை கேப்டனாக வழிநடத்திச் சென்ற உலக சாதனை இந்தியாவின் மகேந்திர சிங் தோனி வசமே உள்ளது. தோனி 2007 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்திய அணியை மொத்தம் 332 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
