சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக 'கிரீன் மேஜிக்' வகை பால் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக அரசு அளிக்கும் விளக்கம் மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, சென்னையில் தினமும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது. இதில் சுமார் 7.5 லட்சம் லிட்டர், அதாவது கிட்டத்தட்ட 50% விற்பனை 'கிரீன் மேஜிக்' பச்சை நிற பாக்கெட் பாலாக உள்ளது. ஆனால், தற்போது இந்த பால் விற்பனை குறைக்கப்பட்டு, மிகக் குறைந்த அளவே வழங்கப்படுவதாக ஆவின் விற்பனை மையங்களே கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். படிப்படியாக 'கிரீன் மேஜிக்' பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், திமுக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில், 'கிரீன் மேஜிக்' பால் விற்பனை குறைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், 'கிரீன் மேஜிக்' பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 2023-ல் இதே போன்ற 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய திமுக அரசு முடிவெடுத்தபோது, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த முடிவை கைவிட்டதை நினைவுபடுத்திய அண்ணாமலை, தற்போதைய திமுக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
'கிரீன் மேஜிக்' பால் விற்பனை குறைப்புக்கு நிதி இழப்பை காரணமாகக் கூறும் திமுக அரசு, நிதி இழப்பைச் சரிசெய்ய பால் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். உடனடியாக, போதுமான அளவு பச்சை நிற 'கிரீன் மேஜிக்' பாக்கெட் பால் விற்பனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.