லாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம், தற்போது பச்சைப்பால் விற்பனையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பற்றாக்குறை மற்றும் நஷ்டத்தை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 4.50% கொழுப்புச்சத்து கொண்ட ஆவின் பச்சைப்பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியுள்ளது. ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் குறைத்திருப்பது நியாயமற்ற செயல் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், அதில் 7.5 லட்சம் லிட்டர் பச்சைப்பால் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது இது 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
ஆவின் பச்சைப்பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆக உள்ள நிலையில், சந்தையில் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுவதால் லிட்டருக்கு ரூ.7 வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை சமாளிக்கவே பச்சைப்பால் வணிகம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு முதலே ஆவின் பச்சைப்பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக 'ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற புதிய பாலை அறிமுகப்படுத்தியதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலின் விலை லிட்டருக்கு ரூ.55 ஆகும். இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் அப்போதைய முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பச்சைப்பால் விற்பனையை நிறுத்த ஆவின் நிறுவனம் துடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவின் நிறுவனம் லாப நோக்கமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான பாலை குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது. ஆவின் பச்சைப்பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.