மதுரை ராமராயர் மண்டபம் முக்கிய சாலையில் இன்று திடீரென பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிச்சியம் பகுதியில் வசிக்கும் வள்ளி (45) என்பவர், கடும் வறுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில், திடீரென பெண் ஒருவர் உடல் எரியும் நிலையில் அலறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதிச்சியம் காவல்துறையினர், வள்ளியின் உடல் 90% படுகாயமடைந்த நிலையில் மீட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வள்ளி தினந்தோறும் பிற வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து, அன்றாட வாழ்க்கையை மிக சிரமத்துடன் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவரது இந்த துயரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், யாரேனும் அவர் மீது தீ வைத்தனரா அல்லது அவராகவே தீக்குளித்தாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையின் நடுவே நடந்த இந்தச் சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.