டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 55 ஆண்டுகளில் நிகழாத மோசமான சாதனையை படைத்துள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய முதல் 2 ஓவர்களுக்குள்ளேயே ரன் ஏதும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறியது. முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பந்துவீச்சில் கூப்பர் கான்னோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி ரன் ஏதும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழப்பது இது 4வது முறையாகும். இந்த மோசமான சாதனையைப் படைக்கும் உலகின் 3வது அணி என்ற தேவையற்ற பட்டியலில் ஆஸ்திரேலியா இணைந்துள்ளது. மேலும், 1971 முதல் 55 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் 3 விக்கெட்களை ரன்னே எடுக்காமல் இழந்து பரிதாபமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மட்டுமே இந்த சரிவைச் சந்தித்துள்ளன. 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள முடியாமல் ஆஸ்திரேலியா 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் மார்னஸ் லபுசேன் (55*) மற்றும் சேவியர் பார்ட்லெட் (52) ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைக் காப்பாற்றியது. இருப்பினும், 42 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் வங்கதேச அணி ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றிருந்தது. இதனால் இத்தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆஸ்திரேலிய அணி இந்த 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 14ஆம் தேதி இதே டாக்காவில் நடைபெறவுள்ளது.