பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது, இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவைப் பார்த்த பெண் ரசிகை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்ட அந்தப் பெண், தனது கையில் அபிஷேக் ஷர்மா கையெழுத்திட்ட பிறகு, அதை டாட்டூவாக மாற்றப்போவதாக தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டி20 தொடரின் முதல் போட்டி பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், அயர்லாந்து அணி நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணியிடம் இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடியும், அணி தோல்வியைத் தழுவியது.
முதல் போட்டி தோல்வி குறித்து பேசிய அபிஷேக் சர்மா, மைதானத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய வீரர்கள் விரைவாக தங்களை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். பயிற்சிப் போட்டிகளில் இதற்காக உழைத்தாலும், முதல் போட்டியில் அது சரியாக அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 'மைதானத்தின் சூழலுக்கு நாம் எவ்வளவு விரைவாக பழகுகிறோம் என்பது ஒரு அணியாக மிகவும் முக்கியமானது. அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடும்போது, ஒரு குழுவாக நாம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பழக வேண்டும். ஒரு ஆதிக்கம் செலுத்தும் அணியாக நாம் மிக விரைவாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாங்களும் அதைத்தான் செய்ய முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை' என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த டி20 தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்ததும், இந்திய அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த வெள்ளைப் பந்து தொடர், ஜூலை 1 புதன்கிழமை அன்று டி20 போட்டியுடன் தொடங்குகிறது.