திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, அண்ணாமலை 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரில் திமுகவைச் சேர்ந்த பலரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவின் சொத்து விவரங்கள் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் அண்ணாமலை நேரில் ஆஜராகி, டி.ஆர். பாலுவிடம் நேரடியாகக் குறுக்கு விசாரணை நடத்தினார். அடுத்த விசாரணைக்கு வரும்போது மீண்டும் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். இதுகுறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.