பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி தனது 'வீ த லீடர்ஸ்' அமைப்பை வலுப்படுத்தி வருகிறார். இந்த அமைப்பில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இவர்கள் பாஜகவிலிருந்து வந்தவர்கள் என்ற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், அதிமுக ஆதரவாளர்கள்தான் பெருமளவில் இதில் இணைகின்றனர். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றி பறிபோக எடப்பாடியின் அரசியல் நகர்வுகளே காரணம் என கூறப்படுகிறது. கடந்த முறை பாஜக வென்ற தொகுதிகளை கொடுக்காமல், அதற்கு அருகிலுள்ள தொகுதிகளை கொடுத்து எடப்பாடி ஆட்டத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் 22 இடங்களில் பாஜகவினர் தோல்வியடைந்தனர். குறிப்பாக அண்ணாமலை தேர்தல் அரசியலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி கவனமாக இருந்ததால், அவருக்கு கடைசி வரை சீட் கொடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, மாநில பாஜக தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி, தேசிய தலைமையை நம்பி மத்திய அமைச்சர் அல்லது கவர்னர் போன்ற பதவிகளுக்காக காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதையடுத்து டெல்லி சென்ற அவர், தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து, பாஜகவிலிருந்து விலகுவதாக கூறினார். பின்னர் தனது 'வீ த லீடர்ஸ்' அமைப்பை பலப்படுத்துவதாக அறிவித்து, அதற்கான ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.
தொடக்கத்தில் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அண்ணாமலையின் தலைமையில் பாஜகவில் இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர். ஆனால், இது பாஜகவை குறிவைக்கும் திட்டம் அல்ல என்றும், அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கும் திட்டம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கிருஷ்ணகிரி முதல் திண்டுக்கல் வரை அதிமுக பலமாக உள்ள பகுதிகளில், அண்ணாமலையின் இயக்கத்தில் அதிமுக ஆதரவாளர்கள் இணைவதை காண முடிகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் வாக்கு வங்கியை சிதைத்து அவரை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை களமிறக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.