தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது பேச்சில், 'இன்றைக்கு தமிழக மக்கள், 'ஏன்டா ஓட்டுப் போட்டோம், சனியன்கள் மாதிரி வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்' என்று நினைக்கிறார்கள். அள்ளி அள்ளி தந்தாரே நமக்கு, அந்த புண்ணியவானை அநியாயமாக தோற்கடித்து விட்டோமே' என்று வருந்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், 'இன்றைக்கு மு.க. ஸ்டாலினை தொகுதியில் அவரை தோற்கடித்தவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட போதும், கன்னியாகுமரியில் அப்பச்சி தோற்கடிக்கப்பட்ட போதும் ஏற்பட்ட உணர்வுகளை நினைவு கூர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன், அதேபோல முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்தது தவறு என்றும், அவர் ஒவ்வொரு தொகுதியாக பார்த்து மக்களுக்கு நன்மை செய்தவர் என்றும் கூறினார்.
தனது பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் தனக்கு ஓட்டு கிடைத்திருக்கும் என்றும், வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் ஓட்டு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய் முட்டிப்போட்டு கொண்டு போனார், அவருக்கு ஓட்டுப் போடுவதா அல்லது எனக்கு ஓட்டுப் போடுவதா என்று மக்கள் நினைத்திருக்கலாம் என்றும், இப்படி தெரிந்திருந்தால் தாங்கள் தலைகீழாகக் கூட முட்டிப்போட்டிருப்போம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தனது தொகுதியில் உள்ள மீனவ சகோதரர்களை உயிராக நேசித்ததாகவும், அவர்களுக்கு இன்னல் வரும்போது தோளோடு தோளாக நின்றதாகவும், ஆனால் அவர்களே தன்னை 'கவுத்து விட்டதாக' அவர் குற்றம் சாட்டினார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுவது, மோதலைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது' என்று கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை இன்று (ஜூலை 03) காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், 'எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லியும் தவெகவில் இணைய வேண்டும் எனவும் காவல் துறையினர் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவில் வலுவாக இருப்பேன். எவருக்கும் அடிபணியமாட்டேன்' என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், 'என்னை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) என்ன சொல்கின்றாரோ அதுதான் எங்களுடைய கட்டளை. நாங்கள் திமுகவில் வலுவாக இருப்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.
'சவால் விட்டு சொல்றேன் 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது, இருக்கவும் விட மாட்டோம்..' என்றும், 'இன்னைக்கு வந்த கட்சிக்கு நாங்க பயப்பட வேண்டுமா? குதிரை அல்ல ஒட்டக பேரம் கூட என்னிடம் நடத்த முடியாது..' என்றும், 'காவல்துறை என்னை தாக்கினால் திருப்பி தாக்குவேன்' என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார். அப்போது, 'போலீஸ் அராஜகம் ஒழிக' என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.