கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன், சக மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தனிநபர் நிகழ்வாக கருத முடியாது என்றும், இதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை, கோவை செட்டிப்பாளையம் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிலரைப் பற்றி அமுதனிடம் காவல் துறையினர் விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர். ஆனால், ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடமே அது குறித்த விவரத்தை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் மாணவரை அடித்துக் கொலை செய்ததாக அமுதனின் பெற்றோர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் இதுபோல அடுத்தடுத்து நான்கு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல் துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு இனியும் தொடரக் கூடாது. மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், கோவை கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்கெனவே இருந்த கோஷ்டி மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் பெற்றோர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைபேசியில் அழைத்து ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அமுதனின் தாயார், 'உதயநிதிதான் நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்திற்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், திங்கட்கிழமை சட்டப்பேரவையில் இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும், அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை, அமுதனின் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து போராடுவதாகவும் உறுதிபட தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் மகன் அமுதன் (19). இவர் கோவை, செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் இரு தரப்புக்கு ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக ஒரு தரப்பிலும், போதைப் பொருள் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
