திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள 'செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த துயர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் ஏற்பட்ட இந்த வாயு கசிவின் காரணமாக, தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த 74 தொழிலாளர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று காலை ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கொள்கலனை முறையாகப் பராமரிக்காததாலும், தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்களைத் தங்கவைத்து உயிரிழப்பு மற்றும் காயங்களுக்குக் காரணமான உரிமையாளர், மனிதவள மேலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
இதனையடுத்து, பெரியபாளையம் போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களான ஜோசப் மோகன் (59), ஜோசப் ஜெகன் (49) மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில், மூவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.